சட்டமன்றத்திற்குள் குட்கா எடுத்துச் சென்ற விவகாரம்-உரிமை மீறல் வழக்கு வேறு அமர்வுக்கு மாற்ற பரிந்துரை

சட்டமன்றத்திற்குள் குட்கா எடுத்துச் சென்றது தொடர்பான உரிமை மீறல் வழக்கு வேறு அமர்வுக்கு மாற்ற பரிந்துரை நீதிபதி பரிந்துரை செய்துள்ளார்.
சட்டமன்றத்திற்குள் குட்கா எடுத்துச் சென்ற விவகாரம்-உரிமை மீறல் வழக்கு வேறு அமர்வுக்கு மாற்ற பரிந்துரை
Published on

சென்னை,

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் தாராளமாக கிடைக்கின்றன என்று குற்றம் சாட்டி, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவற்றை சட்டசபைக்குள் கொண்டு சென்று காண்பித்தனர். இந்த செயல் சபையின் மாண்புக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறி தி.மு.க. தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 தி.மு.க. எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டசபை உரிமை மீறல் குழுவுக்கு, சபாநாயகர் உத்தரவிட்டார்.

இதன்படி அவர்களுக்கு உரிமை மீறல் குழு நோட்டீஸ் அனுப்பியது. தமிழக அரசு குறுக்கு வழியில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க குட்கா விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு இந்த நோட்டீசை அனுப்பி உள்ளதாகவும், இந்த நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 பேரும், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணையின்போது, தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் ஜெ.அன்பழகன், கே.பி.பி.சாமி ஆகியோர் இறந்து விட்டனர். கு.க.செல்வம் கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர், உரிமை மீறல் குழு அனுப்பியுள்ள நோட்டீசில், அடிப்படை தவறுகள் உள்ளன. இந்த நோட்டீசின் அடிப்படையில் மனுதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. இதன்பின்னரும், மனுதாரர்கள் அவையில் உரிமை மீறலில் ஈடுபட்டதாக கருதி, உரிமைமீறல் குழு நடவடிக்கை எடுக்க நினைத்தால், புதிதாக நோட்டீஸ் அனுப்பலாம். இந்த ஐகோர்ட்டில் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்ட கருத்துக்களை தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தனர்.

இந்த நிலையில், கடந்த 7-ந்தேதி துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் கூடிய உரிமை மீறல் குழு தி.மு.க., எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் உள்பட 18 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திரபாபு பரிந்துரை செய்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com