எல்லை மீறிய 'ரீல்ஸ்' மோகம்: நைட்டி அணிந்து குத்தாட்டம் போட்ட இளைஞர்கள்- அதிரடி காட்டிய போலீசார்

ரெயில் பெட்டி போன்று இளைஞர்கள் ஒன்று சேர்ந்து வலம் வந்தபடி பொதுமக்களுக்கு இடையூறையும் ஏற்படுத்தினர்
எல்லை மீறிய 'ரீல்ஸ்' மோகம்: நைட்டி அணிந்து குத்தாட்டம் போட்ட இளைஞர்கள்- அதிரடி காட்டிய போலீசார்
Published on

களியக்காவிளை,

குமரிமாவட்டம் குழித்துறையில் நடந்து வரும் வாவுபலி பொருட்காட்சியில், 'ரீல்ஸ்' மோகத்தில் சில இளைஞர்கள் கூட்டத்தின் இடையே முகம் சுளிக்க வைக்கும்படி குத்தாட்டம் போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது குழித்துறை நகராட்சி சார்பில் வாவுபலி பொருட்காட்சி நடந்து வருகிறது. இந்த பொருட்காட்சியை காண தினமும் ஏராளமானோர் குடும்பம், குடும்பமாக வந்து செல்கிறார்கள்.

அந்த சமயத்தில் திடீரென இளைஞர்கள் சிலர் கூட்டத்தினரிடையே நைட்டி அணிந்தபடி புகுந்தனர். அதோடு நின்று விடாமல் அதே உடையுடன் ரெயில் பெட்டி போன்று இளைஞர்கள் ஒன்று சேர்ந்து வலம் வந்தபடி பொதுமக்களுக்கு இடையூறையும் ஏற்படுத்தினர். இதனை சற்றும் எதிர்பார்க்காத பெண்கள் அச்சம் அடைந்தனர். ஆனாலும் இளைஞர்களின் ஆட்டம் நின்றபாடில்லை. நைட்டியை தூக்கியபடி மாடல் அழகி நிகழ்ச்சி போன்றும் செய்து காட்டினர். இது பெண்களை முகம் சுளிக்கும் வகையில் இருந்தது. இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பொதுஇடத்தில் இதுபோன்று அநாகரீகமாக செயல்பட்ட இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூகவலைத்தளத்தில் பலரும் கருத்துகளை பதிவிட்டனர். இதுதொடர்பாக பள்ளியாடி பகுதியைச் சேர்ந்த மார்சல் (வயது 25), சஜூ (24) உள்பட 7 பேர் மீது களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com