

சென்னை,
தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;
”மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.2,087 கோடி நிதியை விடுவிக்காமல் வஞ்சிக்கும் பாஜக மத்திய அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்!
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) மூலம் வெளிவந்துள்ள இந்த உண்மை, மோடி அரசு தொடர்ந்து தமிழ்நாட்டை எவ்வாறு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் புறக்கணிக்கிறது என்பதை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது.
2026-27 நிதியாண்டில் ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை மட்டுமே 29.83 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 31.47 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கி, 3.22 கோடி மனித சக்தி நாட்களை உருவாக்கி ரூ.1,804 கோடியை தமிழக அரசு செலவிட்டுள்ளது. புதிய விபி-ஜி ராம் ஜி (VB-G RAM G) 60:40 திட்டத்தின் கீழும் 81.39 லட்சம் குடும்பங்கள் பதிவு செய்யப்பட்டு, 103.18 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மத்திய அரசு உரிய நிதியைத் தராமல் இழுத்தடிப்பதால் தமிழ்நாடு அரசு கடுமையான நிதிச் சுமைக்கு ஆளாகியுள்ளது.
மத்திய அரசு வழங்கிய நிதி 2023-24 இல் ரூ.13,395 கோடியாக இருந்து, 2024-25 இல் ரூ.10,744 கோடியாகக் குறைந்து (19.79% சரிவு), 2025-26 இல் வெறும் ரூ.6,254 கோடியாக (முந்தைய ஆண்டை விட 41.79% சரிவு; 2023-24 உடன் ஒப்பிடுகையில் 53.31% பெரும் சரிவு) திட்டமிட்டு வெட்டப்பட்டுள்ளது.
மழைப்பொழிவு குறைந்து வாழ்வாதாரம் இழந்து நிற்கும் ஏழை, எளிய, உழைக்கும் மக்களின் வயிற்றிலடிக்கும் இந்த அநீதிக்கு மத்திய மந்திரி சிவராஜ்சிங் சவுகானும், பிரதமர் மோடியும் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? ஊரக வளர்ச்சியை முடக்கும் துரோகத்தை நிறுத்தி, நிலுவையில் உள்ள ரூ.2,087 கோடியை உடனடியாக விடுவிக்கக் கோரி மத்திய அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளேன்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.