ஜெயலலிதா மரணம் தொடர்பாக துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை ஆணையம் விசாரிக்கும்-சசிகலா தரப்பு நம்பிக்கை

ஜெயலலிதா மரணம் தொடர்பாக துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை ஆணையம் விசாரிக்கும் என நம்புவதாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன் கூறினார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை ஆணையம் விசாரிக்கும்-சசிகலா தரப்பு நம்பிக்கை
Published on

சென்னை:

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்துவதற்காக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்துக்கும், அங்கு பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகளுக்கும் தொடர்ந்து சம்மன் அனுப்பப்பட்டு வருகிறது. இதற்கு முன்னர் இது தொடர்பாக பலரிடம் விசாரணை நடத்திய ஆணையம் பல்வேறு தகவல்களை திரட்டியுள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் ஆறுமுகசாமி ஆணையம், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திடம் கண்காணிப்பு கேமரா காட்சிகளை தருமாறு கேட்டிருந்தது. ஆனால் அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகமோ, ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது பதிவான வீடியோ காட்சிகள் தங்களிடம் இல்லை என்றும், அப்போது பதிவான காட்சிகள் அழிந்து விட்டதாகவும் கூறியது. இதனை ஏற்க மறுத்த ஆணையம், அப்பல்லோ நிர்வாகத்திடம் மீண்டும் உரிய விளக்கம் கேட்டுள்ளது.

இந்த நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று ஆஜராகுமாறு அப்பல்லோ டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட 11 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை ஏற்று டாக்டர்கள் ராமச்சந்திரன் அர்ச்சனா, சினேகாஸ்ரீ ஆகியோர் இன்று ஆஜரானார்கள். எக்கோ டெக்னீசியன் நளினி, செவிலியர்கள் ஷில்பா, விஜய லட்சுமி, பிரேமா ஆகியோரும் விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்கள்.

இவர்களிடம் சசிகலா தரப்பு வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை செய்தார். ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது, நடந்தது என்ன? என்பது தொடர்பாக அவர் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை செய்தார்.

அப்பல்லோ நிர்வாக அதிகாரியான சுப்பையா விஸ்வநாதன் நாளை ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இவர்களுடன் டாக்டர்கள் பத்மாவதி, வெங்கட்ராமன் ஆகியோரும் ஆஜராகிறார்கள்.

நாளை மறுநாள் (27-ந் தேதி) டாக்டர்கள் ரவிக்குமார், பாஸ்கரன், செந்தில் குமார், சாய்சதீஷ் ஆகியோர் ஆஜராக உள்ளனர்.

ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கடந்த ஓராண்டாக பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி முடித்துள்ள நிலையில் அப்பல்லோ நிர்வாகத்திடமும், டாக்டர்கள் மற்றும் செவிலியர்களிடமும் ஆணையம் இறுதிக்கட்ட விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது.

இதுவரை 50-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. சசிகலாவிடம் விரைவில் விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்னர் விசாரணை ஆணையத்தின் முதல் கட்ட அறிக்கை வெளியாகும் என்று தெரிகிறது.

குறுக்கு விசாரணை முடிந்ததும் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன் கூறியதாவது:-

சம்மன் அனுப்பப்பட்ட 11 பேரில் 9 பேர் குறுக்கு விசாரணைக்கு ஆஜராகினர். ஜெயலலிதாவை மருத்துவமனையில் சேர்க்கும்போது அவர் சுயநினைவுடன் இருந்தார் என அப்பலோ மருத்துவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். ஜெயலலிதா மரணம் தொடர்பாக துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை ஆணையம் விசாரிக்கும் என நம்புகிறேன் .

மருத்துவர் சிவகுமார் கொடுத்த ஜெயலலிதாவின் ஆடியோ அப்போலோ மருத்துவமனையில்தான் எடுக்கப்பட்டது. ஜெயலலிதா ஆடியோ விவகாரத்தை மருத்துவர் அர்ச்சனா உறுதி செய்துள்ளார். என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com