

கரூர்,
கரூர் மாவட்டம் குளித்தலையில் திருமணமான இளம்பெண் ஒருவரை அவரது முன்னாள் காதலன் கத்தியால் கொடூரமாக குத்தினார்.
கரூர் மாவட்டத்தின் ஒரு இளம்பெண்ணும், ஒரு வாலிபரும் காதலித்து வந்தனர். ஆனால் சில காரணங்களால் இவர்களது காதல் தடைபட்டது. இதையடுத்து, அந்தப் பெண்ணுக்கு வேறொரு நபருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகும் முன்னாள் காதலன் அந்தப் பெண்ணை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார்.
இன்று (சனிக்கிழமை) குளித்தலை பகுதியில் அந்தப் பெண் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முன்னாள் காதலன் திடீரென அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எனவே, ஆத்திரமடைந்த அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அந்தப் பெண்ணை சரமாரியாகக் குத்தினார். அதனால் அந்த பெண் வலியில் அலறிக் கூச்சலிட்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு சுற்றியிருந்த பொது மக்கள் ஓடி வந்தனர்.
பொதுமக்கள், ரத்த வெள்ளத்தில் சரிந்த அந்த பெண்ணை உடனடியாக மீட்டு, சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், தப்பியோட முயன்ற முன்னாள் காதலனை அங்கிருந்த பொதுமக்கள் மடக்கிப் பிடித்து, தர்மஅடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து கரூர் குளித்தலை போலீசார் வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்ட நபரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.