சொத்து தகராறில் தாய், மகளை கத்தியால் குத்திய உறவினர் கைது

கிணத்துக்கடவில் சொத்து தகராறில் தாய், மகளை கத்தியால் குத்திய உறவினர் கைது செய்யப்பட்டார்.
சொத்து தகராறில் தாய், மகளை கத்தியால் குத்திய உறவினர் கைது
Published on

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவில் சொத்து தகராறில் தாய், மகளை கத்தியால் குத்திய உறவினர் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சொத்து தகராறு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு விவேகானந்தர் வீதியைச் சேர்ந்தவர் போபால்ராஜ் (வயது 51). இவருடைய மனைவி சுலோச்சனா (48). இவர்களுக்கு சர்மிளா (28), மணிமேகலை (25) என்ற 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் சர்மிளாவிற்கு திருமணம் ஆகிவிட்டது. மணிமேகலை கிணத்துக்கடவில் உள்ள ஹார்டுவேர்ஸ் கடையில் வேலை பார்த்து வருகிறார்.

கிணத்துக்கடவு கலைவாணர் வீதியில் சுலோச்சனாவின் உறவினர் அய்யப்பன் என்பவர் வசித்து வருகிறார். அய்யப்பன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் 2 பேருக்கும் இடையே பூர்விக சொத்து தொடர்பாக தகராறு இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் சுலோச்சனா குடும்பத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததாக தெரிகிறது.

தாய், மகளுக்கு கத்திக்குத்து

இதனால் அய்யப்பன் மிகவும் கோபத்துடன் காணப்பட்டார். சம்பவத்தன்று அவர் சுலோச்சனாவின் கணவர் போபால்ராஜை தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளார். இதனை சுலோச்சனா மற்றும் அவரது மகள் மணிமேகலை ஆகியோர் தடுக்க முயன்றனர். இதில் ஆத்திரமடைந்த அய்யப்பன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுலோச்சனா, மணிமேகலையை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார்.

இதில் பலத்த காயம் அடைந்த அவர்கள் 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு கிணத்துக்கடவு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 2 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

உறவினர் கைது

இந்த சம்பவம் குறித்து சுலோச்சனா கிணத்துக்கடவு போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து தாய், மகளை கத்தியால் குத்திய அய்யப்பனை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் கிணத்துக்கடவு பழைய சோதனைச்சாவடி அருகே நின்றுகொண்டிருந்த அய்யப்பனை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com