

சென்னை,
10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2 கட்டங்களாக திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி முதல் திருப்புதல் தேர்வு கடந்த 9-ந்தேதி மாணவர்களுக்கு தொடங்கியது. இதில் 10-ந்தேதி நடைபெற இருந்த தேர்வை தவிர, மற்ற 3 நாட்களில் தேர்வு நடந்து முடிந்து இருந்த நிலையில், நேற்று நடைபெற்ற தேர்வுக்கான வினாத்தாள் சமூக வலைதளங்களில் நேற்று முன்தினம் முன்கூட்டியே வெளியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்தவகையில் நேற்று நடைபெற்ற 10-ம் வகுப்பு அறிவியல் தேர்வு, 12-ம் வகுப்பு கணிதம் தேர்வு வினாத்தாள்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது. இந்த வினாத்தாள் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து வெளியாகிய விவரங்கள் நேற்று முன்தினம் இரவு தெரியவந்தது. இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில், திருவண்ணாமலை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் பொறுப்பில் இருந்து அருள்செல்வம் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக விழுப்புரம் மாவட்டம் முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணபிரியா கூடுதல் பொறுப்பாக இதனை கவனிப்பார் என்று பள்ளி கல்வி இணை இயக்குனர் நரேஷ் தெரிவித்துள்ளார்.இந்த கூடுதல் பொறுப்பினை ஏற்கும் கல்வி அதிகாரி அந்த பணியிடத்தில் மறு அலுவலர் பணி ஏற்கும் வரை முழு கூடுதல் பொறுப்பில் செயல்படவும் அனுமதித்து ஆணை வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.