

சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்க கூடியது செம்பரம்பாக்கம் ஏரி, தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் கிருஷ்ணா நதிநீர் வருகையால் ஏரியில் நீர் நிறைந்து காணப்படுகிறது.
நேற்று காலை நேர நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21.96 அடியாகவும், மொத்த கொள்ளளவு 3,110 மில்லியன் கன அடியாகவும் இருந்தது. நீர் வரத்து 231 கன அடி, நீர் வெளியேற்றம் 138 கன அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் உயரம் 22 அடியை எட்ட உள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதற்கட்டமாக 100 கன அடி உபரி நீரை திறக்க காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து இன்று காலை 100 கன அடி உபரி நீர் திறந்து விடப்படுகிறது. அதுமட்டுமின்றி சிக்கராயபுரம் கல்குவாரி முழுவதும் நீர் நிறைந்து காணப்படுவதால் அதிலிருந்து தற்போது சென்னை குடிநீருக்காக தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. பருவமழைக்கு முன்பு செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டத்தை சற்று குறைத்து வைத்து கண்காணிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்திருப்பதும் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படுவது குறிப்பிடத்தக்கது.