பூண்டி ஏரியில் இருந்து 1,000 கன அடி தண்ணீர் வெளியேற்றம்

சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் ஒன்று பூண்டி.
பூண்டி ஏரியில் இருந்து 1,000 கன அடி தண்ணீர் வெளியேற்றம்
Published on

ஊத்துக்கோட்டை,

சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், ஜமீன் கொரட்டூர் ஏரிகளுக்கு திறந்து விடுவது வழக்கம். தற்போது கிருஷ்ணா நதிநீர் வரத்து இல்லை. மழைநீர் மட்டும் வந்து கொண்டிருக்கிறது.

கடந்த 2 நாட்களாக பூண்டி ஏரி நீர் பிடிப்பு பகுதியில் அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிக்கு நீர்வரத்து அதிகமானது. நேற்று முன்தினம் வினாடிக்கு 40 கன அடி வீதம் மழைநீர் வந்ததால் மதகுகள் வழியாக வினாடிக்கு 40 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. நேற்று காலை நிலவரப்படி ஏரிக்கு வினாடிக்கு 190 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் ஏரியில் இருந்து நீர் திறப்பு வினாடிக்கு 1,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். நேற்று காலை நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 34.77 அடியாக பதிவானது. 3.073 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com