குளக்கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தரகம்பட்டி அருகே கோமாளி குளக்கரையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
குளக்கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
Published on

அடிக்கடி விபத்து

கரூர் மாவட்டம், தரகம்பட்டி அருகே மைலம்பட்டி கடைவீதி அருகே கோமாளி குளம் உள்ளது. இந்த குளத்தின் கரைப்பகுதியினை சிலர் ஆக்கிரமித்து கடைகள் கட்டி நடத்தி வந்தனர். இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்தும், போக்குவரத்திற்கு இடையூறும் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து கோமாளி குளத்தின் கரைப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த்துறையினர் 10 நாட்கள் அவகாசம் கொடுத்தும் எந்த பலனும் ஏற்படவில்லை.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

இதையடுத்து நேற்று காலை கடவூர் தாசில்தார் முனிராஜ் தலைமையில் வருவாய்த்துறையினர் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் கோமாளி குளத்தின் கரைப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினர். மேலும் இனிமேல் யாராவது குளத்தின் கரையினை ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

அப்போது, கீழப்பகுதி ஊராட்சி மன்ற தலைவர் புல்லட் ஷாஜகான், மைலம்பட்டி வருவாய் ஆய்வாளர் நெப்போலியன், கிராம நிர்வாக அதிகாரிகள், வருவாய்த்துறை, ஊராட்சி துறை பணியாளர்கள் உடனிருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com