பேனர்களை அகற்ற கோரி டிராபிக் ராமசாமி போராட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் பேனர்களை அகற்ற கோரி டிராபிக் ராமசாமி தரையில் படுத்து போராட்டம் நடத்தினார்.
பேனர்களை அகற்ற கோரி டிராபிக் ராமசாமி போராட்டம்
Published on

கோவை,

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் பேனர்கள் (விளம்பர பதாகைகள்) வைக்கப்பட்டு இருந்தன. இந்தநிலையில் நேற்று கோவை வந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, ஆர்.எஸ்.புரம் பகுதியில் இருந்த பேனர்கள் அனுமதி இன்றி வைக்கப்பட்டு இருப்பதாகவும், அவற்றை உடனே அகற்றக் கோரியும் தரையில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதை அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் வந்து அந்த பகுதியில் இருந்த 3 பேனர்களை அகற்றினர்.

இதைத்தொடர்ந்து டிராபிக் ராமசாமி, தலைமை தபால் நிலையம் அருகே சென்றார். அங்கும் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. அவற்றையும் அகற்ற கோரி டிராபிக் ராமசாமி தரையில் படுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

உடனே போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர் பேனர்களை அகற்றினால் தான் இங்கிருந்து செல்வேன் என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இது தொடர்பாக போலீசார் மீண்டும் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை ஏற்று அவர் போராட்டத்தை கைவிட்டு ஆதரவாளர்களுடன் அங்கிருந்து சென்றார்.

இது குறித்து டிராபிக் ராமசாமி கூறும்போது, கோவையில் அனுமதியின்றி ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. இதுதொடர்பாக நான் கோர்ட்டில் வழக்கு தொடருவேன் என்றார். இதே போல் பேனர்களை அகற்ற கோரி கோவையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு டிராபிக் ராமசாமி போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com