ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற 5 பேர் கைது கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரி ஊழியரும் சிக்கினார்

ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை ஊழியர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற 5 பேர் கைது கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரி ஊழியரும் சிக்கினார்
Published on

சென்னை,

சென்னையில் ரெம்டெசிவிர் கொரோனா தடுப்பு மருந்து கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இவ்வாறு அதிக விலைக்கு விற்பவர்களை வேட்டையாடி பிடிக்க போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் கூடுதல் கமிஷனர் டாக்டர் கண்ணன் மேற்பார்வையில், கிழக்கு மண்டல இணை கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தினமும் கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி கடந்த ஒரு வாரமாக சென்னையில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தை விற்றதாக இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அடையாறு போலீசார் வாகன சோதனையில் 3 பேரை பிடித்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ரெம்டெசிவிர் மருந்தை திருவல்லிக்கேணி நடேசன் சாலையில் உள்ள ஒரு மருந்துக்கடையில் திருட்டுத்தனமாக விற்பனை செய்வதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த மருந்து கடையில் சோதனை நடத்திய தனிப்படை போலீசார், 5 ரெம்டெசிவிர் மருந்து பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

அது தொடர்பாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை ஒப்பந்த ஊழியர் பாலகிருஷ்ணன் (வயது 23), இவரது நண்பர் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த முகமது கலீல் (35), முகமது ஜாவித் (23), புரசைவாக்கத்தைச் சேர்ந்த முகமது இப்பான் (34), திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஆரிப்உசேன் (32) ஆகிய 5 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com