

நாகப்பட்டினம்,
சீரமைப்பு பணிகள் காரணமாக நாகப்பட்டினம்- இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து 11-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் - இலங்கை காங்கேசன்துறை இடையிலான கப்பல் சேவை கடந்த 2023-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது பயணிகள் இடையே போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் கப்பல் சேவை நிறுத்தப்பட்டது. அதன்பின் 2024-ம் ஆண்டு சிவகங்கை என்ற பெயரில் சுபம் என்ற தனியார் கப்பல் நிறுவனம் மீண்டும் சேவையை தொடங்கியது.
பயணிகள் இடையே வரவேற்பை பெற்றதால் வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற நாட்களில் கப்பல் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக நேற்று முன்தினம் ஒருநாள் மட்டும் நாகப்பட்டினம் - இலங்கை இடையேயான கப்பல் சேவை நிறுத்தப்பட்டது.
நேற்று விடுமுறை என்பதால் இன்று (புதன்கிழமை) கப்பல் சேவை தொடங்கப்படும் என பயணிகள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். இந்நிலையில் கப்பல் போக்குவரத்து தொடர்பான பாதுகாப்பு, ஆய்வு சான்றிதழ்கள் மற்றும் விதிமுறை குறித்து ஆய்வு செய்யும் வணிக கடல்சார் துறை அதிகாரிகள் சென்னையில் இருந்து நாகப்படினம் வந்து இலங்கைக்கு இயக்கப்படும் கப்பல்களை ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் சில குறைபாடுகள் கண்டறியப்பட்டதாகவும், இந்த குறைபாடுகளை சரிசெய்யும் வரை கப்பல் சேவையை ரத்து செய்ய சென்னை வணிக கடல்சார் துறை சார்பில் கடிதம் வழங்கப்பட்டதாகவும் தெரிகிறது. இதனையடுத்து கப்பல்களில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.
இந்த சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்றவுடன் 11-ந்தேதிக்கு பின்னர் பயணிகள் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை நாகப்பட்டினம் - இலங்கை காங்கேசன் துறை வரையிலான திட்டமிடப்பட்ட பயணங்கள் அனைத்தும் 11-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. குறைபாடுகள் தொடர்பான பணிகள் அனைத்தும் நிறைவடைந்தவுடன் கப்பல் சேவை மீண்டும் தொடங்கப்படும்.
பணிகளின் நிலை மற்றும் கப்பல் சேவை மீண்டும் தொடங்குவது குறித்த கூடுதல் தகவல்கள் வருகிற 11-ந் தேதிக்கு பின்னர் அறிவிக்கப்படும் என கப்பல் நிர்வா கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.