

சென்னை,
டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைகழகத்திற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யவும், பதிவாளரை நியமிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், 'விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்ட மாணவர்களின் நலனுக்காக, வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை பிரித்து, விழுப்புரத்தை தலையிடமாக கொண்டு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. துணை வேந்தர் நியமிக்கப்பட்டு, பல்கலைக்கழக கட்டுமானத்திற்காக விழுப்புரம் மாவட்டம், செம்மேடு கிராமத்தில், 70 ஏக்கர் நிலம் அதிமுக அரசால் ஒதுக்கப்பட்டது. நிலம் ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போதைய அரசின் புறக்கணிப்பால் பல்கலைக்கழகம் இன்னும் பழைய தாலுகா அலுவலகத்தில் செயல்படுகிறது. இதுவரை பல்கலைக்கழகத்திற்கு பதிவாளரும், போதுமான பணியாளர்களும் நியமிக்கப்படாததால், பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் பதிவாளர், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அதன் முதுகலை மையத்தில் முதுகலை படிப்பில் சேர விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது சட்டத்தை மீறிய செயல், அந்த அறிவுப்புக்கு தடை விதிக்கவேண்டும்' என்று அந்த மனுவில் கோரியுள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி அமர்வில் ஓரிரு நாட்களில் விசாரணைக்கு வர உள்ளது.