அமைச்சர்கள் இலாகா மாற்றம் - விரைவில் அரசாணை

மின்சாரத்துறையை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும், மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையை அமைச்சர் முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் இலாகா மாற்றம் - விரைவில் அரசாணை
Published on

சென்னை,

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குகளில் அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த ஜூன் 13-ம் தேதி இரவு கைது செய்தது. அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜி தற்போது காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வரும் 28-ம் தேதி வரை அவருக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜி வகித்து வந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு அமலாக்கத்துறை ஆகிய துறைகளை மின்துறையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவிடமும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையை, வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமியிடமும் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், செந்தில்பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக வைத்திருப்பது என்றும் முடிவுவெடுத்து இதுகுறித்து கவர்னருக்கு பரிந்துரைத்தனர். ஆனால் அந்த பரிந்துரையில் செந்தில் பாலாஜி என்ன காரணத்துக்காக கைது செய்யப்பட்டார்? என்ற விவரம் இல்லாததால் அதை குறிப்பிடும்படி அரசுக்கு அதை திருப்பி அனுப்பிவிட்டார். இதன் காரணமாக அமைச்சர்களின் இலாகா மாற்றமும் ஏற்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு மூத்த அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கவர்னர் கேட்ட விளக்கத்துக்கு என்ன மாதிரியான பதில் தெரிவிக்க வேண்டும் என்று இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதன் பிறகு கவர்னர் ஆர்.என்.ரவிக்கு உரிய விளக்கங்களுடன் முத-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

அதில் கவர்னர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள வார்த்தைகள் துரதிருஷ்டவசமானவை. கடிதத்தை திருப்பி அனுப்பியது அரசியல் சட்டத்துக்கும், மாநில சுயாட்சிக்கும் எதிரானது. அமைச்சர்களின் இலாகாக்களை பிரித்துக் கொடுக்கும் அதிகாரம் தனக்கு இருப்பதாகவும் அரசமைப்பு சட்டத்தை பின்பற்றியே தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் வசம் உள்ள துறைகள், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமிக்கு ஒதுக்கப்படுவது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என உயர் அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். முதல்-அமைச்சரின் பரிந்துரையை திருப்பி அனுப்பியதாலும் ஆளுநரிடமிருந்து துறைகள் ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு வெளியாகாவிட்டால், முதல்-அமைச்சரின் அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழ்நாடு அரசு சார்பாக அரசாணை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com