

அரும்பார்த்தபுரம் மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி, மனைவி படுகாயம் அடைந்தனர்.
ஓய்வுபெற்ற சுகாதார ஆய்வாளர்
புதுவையை அடுத்த தமிழக பகுதியான நாவற்குளத்தை சேர்ந்தவர் சிக்கந்தர் அலி (வயது 72). தமிழக சுகாதாரத்துறையில் ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் ஆவார். இவரது மனைவி பாத்திமா பீவி (65). இவர்கள் 2 பேரும் நேற்று மதியம் 1 மணி அளவில் சுல்தான்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மோட்டார் சைக்கிளில் வந்தனர். புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் அரும்பார்த்த புரம் மேம்பாலத்தின் மீது வந்துகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அந்த வழியாக சென்ற கார் மோதியது. இதில் கணவன், மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தடுப்பு சுவரில் மோதி பலத்த காய மடைந்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போலீசார் மீட்டனர்
இதை அறிந்த வில்லியனூர் போக்குவரத்து போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள், காயமடைந்து இருந்த சிக்கந்தர் அலி, பாத்திமா பீவி ஆகியோரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.