கரூர் சம்பவ வழக்கில் நீதிபதி குறித்து அவதூறு: ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி கைது

கரூர் சம்பவ வழக்கில் நீதிபதி குறித்து அவதூறு பரப்பிய ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார்.
கரூர் சம்பவ வழக்கில் நீதிபதி குறித்து அவதூறு: ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி கைது
Published on

சென்னை,

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ந் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை சமீபத்தில் சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, தவெக தலைவர் விஜய் குறித்து கண்டனங்களை முன்வைத்தார்.

இந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துகளை பரப்பியதாக சென்னை அஸ்தினாபுரம் பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகரான அஸ்தினாபுரம் சசிகுமார், தவெக, ஐ.டி.விங்கை சேர்ந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த டேவிட், தூத்துக்குடி வேம்பூரை சேர்ந்த அந்தோணி சகாய மைக்கேல் ராஜ் ஆகிய 4 பேரையும் ஏற்கனவே பரங்கிமலையில் சென்னை தெற்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் நீதிபதி குறித்து அவதூறு பரப்பியதாக கோடம்பாக்கத்தை சேர்ந்த வரதராஜன் (64) என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர். இவர் காவல்துறையில் கைரேகை பிரிவில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com