

தொண்டி,
ராமநாதபுரம் மாவட்டம் நொச்சிவயல் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 26). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக திருவாடானை தாலுகா புல்லூர் குரூப் வி.ஏ.ஓவாக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் புல்லூர் குரூப் நாவலூரை சேர்ந்த ஒய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் மணி என்பவர் பட்டா மாறுதல் கேட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் மூலம் மனு அளித்துள்ளார்.
இந்த மனுவை வி.ஏ.ஓ சதீஷ் மேல் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இது தொடர்பாக வி.ஏ.ஓ. சதீஷை பல முறை நேரில் சந்தித்து பட்டா மாறுதல் மனுவை பரிந்துரைக்குமாறு ஒய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் மணி கேட்டுள்ளார்.
ஆனால் வி.ஏ.ஓ சதீஷ் பணம் கொடுத்தால் தான் செய்து தர முடியும் என்று உறுதியாக கூறியதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து மணி ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அலுவலகத்தில் புகார் கொடுத்து உள்ளார்.
அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை துணை சூப்பிரண்டு உன்னி கிருஷ்ணன் , இன்ஸ்பெக்டர்கள் ராஜேஸ்வரி, குமரேசன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மாறு வேடத்தில் மறைந்து நின்று வி.ஏ.ஓ சதீஷை கண்காணித்துள்ளனர்.
அப்போது, ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் மணி ரசாயனம் தடவிய ரூ. 3 ஆயிரத்தை சதீஷிடம் கொடுத்துள்ளார். பின்னர், அங்கு மறைந்து நின்ற போலீசார் சதீஷை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்து ரூ. 3 ஆயிரத்தையும் கைப்பற்றி விசாரணை நடத்திவருகின்றனர்.