3 தமிழர்கள் மீதும் மிக அருகில் இருந்து துப்பாக்கியால் சுட்டது அம்பலம்; பிரேத பரிசோதனையில் 'பகீர்' தகவல்

3 தமிழர்களும் வனவிலங்குகளை வேட்டையாடியதாக வனத்துறையினர் கூறியிருந்தனர்.
3 தமிழர்கள் மீதும் மிக அருகில் இருந்து துப்பாக்கியால் சுட்டது அம்பலம்; பிரேத பரிசோதனையில் 'பகீர்' தகவல்
Published on

சென்னை,

சாம்ராஜ்நகரில் நடந்த என்கவுண்ட்டரில் 3 தமிழர்கள் பலியான வழக்கில் பிரேத பரிசோதனை அறிக்கையில் பகீர் தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் 3 பேர் மீதும் மிக அருகில் இருந்து துப்பாக்கியால் சுடப்பட்டது தெரியவந்துள்ளது.

3 தமிழர்கள்

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் காவேரி வனப்பகுதிக்கு உட்பட்ட சாக்கியா கிராமத்தையொட்டிய வனப்பகுதி யில் கடந்த 15-ந் தேதி வனத்துறையினரால் அந்தோணிசாமி, ஜான் ரோஸ் பீட்டர் மற்றும் செபஸ்டின் டேவிட் குமார் ஆகியோர் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் வனவிலங்குகளை வேட்டையாடியதாக வனத்துறையினர் கூறியிருந்தனர். ஆனால் இது ஒரு திட்டமிட்ட கொலை என்று பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டினர்.

இதுகுறித்து சாம்ராஜ்நகர் மாவட்ட உதவி கலெக்டர் தினேஷ் குமார் மீனா தலைமையிலான அதிகாரிகள் குழுவினரும், போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று என்கவுண்ட்டரில் பலியான 3 பேரின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

திடீர் திருப்பம்

அதாவது என்கவுண்ட்டரில் பலியான செபஸ்டின் டேவிட் குமாரின் உடலில் இருந்த துப்பாக்கி குண்டுகள் மிகவும் அருகில் இருந்து சுடப்பட்டவை என்றும், அவரது உடலில் உள்காயங்கள் இருந்ததாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. உடலில் நெஞ்சு, தொடை, வயிற்றுப் பகுதிகளில் துப்பாக்கி குண்டுகள் துளைத்ததற்கான காயங்களும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் அந்த தோட்டாக்களின் அளவும், ஏற்கனவே சம்பவம் நடந்த இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட தோட்டாக்களின் அளவும் சரியாக இருப்பதாகவும், அதனால் அவரை மிகவும் அருகில் இருந்தே என்கவுண்ட்டர் செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதேபோல்தான் அந்தோணிசாமி மற்றும் ஜான் ரோஸ் பீட்டர் ஆகியோரின் உடல்களிலும் துப்பாக்கி குண்டுகள் துளைத்திருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதுமட்டுமின்றி 3 பேரின் உடல்களிலும் 8.5 சென்டி மீட்டர் அகலத்தில், 6 சென்டி மீட்டர் ஆழத்துக்கு காயங்கள் உள்ளன. அவை எப்படி ஏற்பட்டது என்பது குறித்து தெரியவில்லை என்றும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன்காரணமாக இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com