விவசாயியிடம் ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது

வாரிசு சான்றிதழ் வழங்குவதற்காக, விவசாயியிடம் ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.
விவசாயியிடம் ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது
Published on

ரூ.8 ஆயிரம் லஞ்சம்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள காவேரியம்மாபட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 43). விவசாயி. இவரது தந்தை வேலுச்சாமி இறந்து விட்டார். இதனால் வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக, ஒட்டன்சத்திரம் தாலுகா அலுவலகத்தில் மாரிமுத்து விண்ணப்பித்திருந்தார்.

அந்த விண்ணப்பத்தின் மீது, வருவாய் ஆய்வாளர் பாண்டியராஜன் (44) விசாரணை நடத்தினார். மேலும் மாரிமுத்துவை தொடர்பு கொண்ட அவர், வாரிசு சான்றிதழ் வழங்குவதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.

ஆனால் அவ்வளவு பணம் தர முடியாது என்று மாரிமுத்து கூறினார். பேரம் பேசி ஒரு கட்டத்தில் ரூ.8 ஆயிரம் வழங்குவதாக மாரிமுத்து ஒப்புக்கொண்டார். இருப்பினும் லஞ்சம் கொடுக்க விரும்பாத மாரிமுத்து, இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

வருவாய் ஆய்வாளர் கைது

இதையடுத்து பாண்டியராஜனை லஞ்ச ஒழிப்பு போலீசார் பொறி வைத்து பிடிக்க முடிவு செய்தனர். அதன்படி ரசாயன பவுடர் தடவிய ரூ.8 ஆயிரத்தை மாரிமுத்துவிடம் போலீசார் கொடுத்தனர்.

அந்த பணத்துடன் நேற்று காலை ஒட்டன்சத்திரம் தாலுகா அலுவலகத்தில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துக்கு மாரிமுத்து சென்றார். பின்னர் அவர், வருவாய் ஆய்வாளர் பாண்டியராஜனிடம் ரூ.8 ஆயிரத்தை கொடுத்தார்.

அப்போது அங்கு சாதாரண உடையில் பதுங்கி இருந்த, லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜன் தலைமையிலான போலீசார் கையும், களவுமாக பிடித்தனர். பின்னர் அவரிடம் துருவி, துருவி போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியராஜனை கைது செய்தனர். கைதான பாண்டியராஜனின் சொந்த ஊர், வேடசந்தூர் அருகே உள்ள சேணன்கோட்டை என்பது குறிப்பிடத்தக்கது. வாரிசு சான்றிதழ் வழங்குவதற்கு லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒட்டன்சத்திரம் பகுதியில் பரபரப்ப ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com