மின் கட்டண உயர்வை ரத்து செய்து, ஜவுளித் தொழில் நிறுவனங்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் - வானதி சீனிவாசன்

தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வை திமுக அரசு ரத்து செய்ய வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தி உள்ளார்.
மின் கட்டண உயர்வை ரத்து செய்து, ஜவுளித் தொழில் நிறுவனங்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் - வானதி சீனிவாசன்
Published on

சென்னை,

தமிழக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கடந்த 2022 செப்டம்பர் 10-ம் தேதி மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனால், இப்போது ஏழை, நடுத்தர மக்கள் கூட, இரு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

"99 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம்" என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அடிக்கடி தனக்குத்தானே பாராட்டிக் கொள்கிறார். ஆனால், 2021 சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் 'மாதம் ஒருமுறை மின் பயன்பாட்டை கணக்கிட்டு மின் கட்டணம் வசூலிக்கப்படும்' என்று திமுக வாக்குறுதி அளித்தது. இதை நிறைவேற்றி இருந்தால், சாதாரண ஏழை மக்கள் இப்போது செலுத்தும் மின் கட்டணத்தில் பாதியை கூட செலுத்த வேண்டிய நிலை இருக்காது.

மின் கட்டணம் உயர்த்தப்பட்டு ஓராண்டு முடியும் முன்பே தொழில் துறையினருக்கான மின் கட்டணத்தை திமுக அரசு யூனிட்டுக்கு 15 முதல் 25 காசுகள் வரை உயர்த்தியுள்ளது. இதனால், தமிழ்நாடு முழுவதும் குறிப்பாக, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட கொங்கு மண்டல பகுதியில் உள்ள குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் குறிப்பாக ஜவுளி நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே நூல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட அவர்களுக்கு மின் கட்டண உயர்வு பெரும் சுமையாகி விட்டது. அதுவும் சிறிய தொழில் நடத்துபவர்கள் அடுத்தகட்டத்துக்கு நகர முடியாதது மட்டுமல்ல, இருப்பதையும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவேதான், மின் கட்டண உயர்வு, நூல் உயர்வைக் கண்டித்து நவம்பர் 5-ம் தேதி (இன்று) முதல் நவம்பர் 25-ம் தேதி வரை அனைத்து ஜவுளி தொழில்களின் உற்பத்தி நிறுத்தப்படும் என தமிழ்நாடு தொழில் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதனால், ஜவுளித் தொழில் சார்ந்துள்ள தொழிலாளர்கள், சிறு வணிகர்கள் என பல லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு இன்று நாட்டில் இரண்டாவது இடத்தில் இருப்பதற்கு, தமிழ்நாட்டின் இன்றைய வளர்ச்சிக்கு கொங்கு மண்டலத்தில் ஏற்பட்ட வளர்ச்சியே காரணம். எனவே, ஜவுளித் தொழில் உற்பத்தி நிறுத்தம் என்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் பாதிக்கும். தமிழ்நாட்டின் நிதி நிலைமை மேலும் மோசமாகும்.

எனவே, தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வை திமுக அரசு ரத்து செய்ய வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இதில் தலையிட்டு மின் கட்டண உயர்வை ரத்து செய்து, ஜவுளித் தொழில் நிறுவனங்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com