தமிழகத்தில் அதிகரிக்கும் கருப்புபூஞ்சை நோய்: இதுவரை 847 பேருக்கு பாதிப்பு

கருப்பு பூஞ்சை நோயால் தமிழகத்தில் இதுவரை 847 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாம் அலையைத் தொடர்ந்து, கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவிலிருந்து மீண்டவர்களை குறிவைத்து கருப்பு பூஞ்சை நோய் தாக்கி வருகிறது.

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள், ஸ்டீராய்டு எடுத்துக்கொண்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகளை இந்த நோய் தாக்கி வருவதாக மருத்துவத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கருப்பு பூஞ்சை நோயால் தமிழகத்தில் இதுவரை 847 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில், கருப்பு பூஞ்சை சிகிச்சைக்காக மத்திய அரசிடம் இருந்து இதுவரை 2,470 குப்பிகள் அம்போடேரிசின் பி தமிழகம் வந்துள்ளது என்றும், கருப்பு பூஞ்சையால் தமிழகத்தில் இதுவரை 847 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஜூன் 2ஆம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 518 ஆக இருந்தது. நோய் பாதிப்பு அதிகரிப்பால் அம்போடேரிசின் பி மருந்துக்கான தேவை அதிகரித்துள்ளது. தமிழக அரசு சார்பில் கூடுதலாக 30 ஆயிரம் மருந்துகளை ஒதுக்கீடு செய்ய சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சை முடிந்து குணமடைந்த அனைவருக்கும் கொரோனாவுக்கு பின் கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படுகிறதா என்பதை சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் கண்காணித்திட வேண்டும் என்றும், மாவட்ட வாரியாக தேவையான சிகிச்சைகளை வழங்கிடவும் சுகாதாரத்துறை வலியுறுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com