

சென்னை,
எளிய நிலையில் இருந்து நாட்டின் மிக உயர்ந்த பொறுப்புகளை அடைவது என்பது பா.ஜ.க.வில் மட்டுமே சாத்தியமாகும் என தமிழிசை சவுந்தரராஜன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தனது ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில், இந்தியாவின் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் 23 ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் அந்த பதிவில் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருப்பதாவது;-
“23 ஆண்டுகளுக்கு முன்பு, திருவள்ளூர் மாவட்டத்தின் ஒரு சிறிய கிராமத்தில் நடைபெற்ற எளிமையான கொடியேற்ற விழாவின்போது எடுக்கப்பட்ட புகைப்படம். தற்போது இந்தியாவின் துணை ஜனாதிபதியாக பொறுப்பு வகிக்கும் சி.பி. ராதாகிருஷ்ணனுடன் இணைந்து, நான் மாவட்டப் பொறுப்பாளராகப் பணியாற்றிய காலத்தின் ஒரு தருணம் இது. எளிய நிலையில் இருந்து நாட்டின் மிக உயர்ந்த பொறுப்புகளை அடைவது என்பது பா.ஜ.க.வில் மட்டுமே சாத்தியம்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.