ரிதன்யா தற்கொலை விவகாரம்: போலீசார் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

ரிதன்யா கணவர் குடும்பத்தினர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுக்களை திருப்பூர் கோர்ட்டு தள்ளுபடி செய்திருந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் திருமணமான இரண்டரை மாதங்களில் புதுமணப்பெண் ரிதன்யா என்பவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தனது கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் வரதட்சணை கேட்டு, உடல் மற்றும் மனரீதியாக கொடுமைப்படுத்தியதாக இறப்பதற்கு முன்பு தனது தந்தைக்கு ரிதன்யா ஆடியோ அனுப்பியிருந்தார்.

இதையடுத்து இந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுக்களை திருப்பூர் மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இதையடுத்து 3 பேரும் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இவர்கள் 3 பேருக்கும் ஜாமீன் வழங்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து இடையீட்டு மனு தாக்கல் செய்யவுள்ளதாக ரிதன்யாவின் தந்தை தரப்பில் முறையிடப்பட்டது.

அதேபோல, இந்த ஜாமீன் மனுக்களுக்கு பதில் அளிக்க போலீஸ் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பதில் மனு தாக்கல் செய்யும்படி போலீசாருக்கு உத்தரவிட்டு, விசாரணையை 30-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com