கூடுதல் பஸ்கள் இயக்கக்கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் விருத்தாசலத்தில் பரபரப்பு

விருத்தாசலத்தில் கூடுதல் பஸ்கள் இயக்கக்கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா.
கூடுதல் பஸ்கள் இயக்கக்கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் விருத்தாசலத்தில் பரபரப்பு
Published on

விருத்தாசலம்,

விருத்தாசலத்தில் அரசு கொளஞ்சியப்பர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் விருத்தாசலம், உளுந்தூர்பேட்டை பகுதி கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

கடந்த சில மாதங்களாக உளுந்தூர்பேட்டையில் இருந்து விருத்தாசலம் நகருக்கு கல்லூரி நேரத்துக்கு அரசு பஸ்கள் சரிவர இயக்கப்படவில்லை. இதனால் உளுந்தூர்பேட்டை பகுதி மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு கல்லூரிக்கு வந்து செல்ல முடியாமல் பரிதவித்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று மாலை கல்லூரி நேரம் முடிந்ததும் மாணவர்கள் விருத்தாசலத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை செல்லும் அரசு பஸ்சில் ஏறி பயணம் செய்தனர்.

அந்த பஸ் விருத்தாசலம் ஆலடி சாலை சந்திப்பு அருகே சென்றபோது, பயணிகள் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருப்பதாக கூறி, டிரைவர் பஸ்சை சாலையோரம் நிறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் பஸ்சை விட்டு இறங்கி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கல்லூரி நேரத்தில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும். அனைத்து பஸ் நிறுத்தங்களிலும் பஸ் நின்று செல்ல வேண்டும் என கூறி கண்டன கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பேரில், மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com