

குளச்சல்:
குளச்சல் அருகே உள்ள திக்கணங்கோடு கீழபுல்லுவிளையை சேர்ந்தவர் ரெத்தினகுமார். இவரது மகன் ரிஜேஸ் (வயது 26), கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் சேனம்விளை அரசு மருத்துவமனை அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பெத்தேல்புரத்தை சேர்ந்த சிம்சோனி (34) என்பவர் வழிமறித்து பணம் கேட்டார். ரிஜேஸ் தன்னிடம் பணம் இல்லை என கூறினார். உடனே சிம்சோனி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி ரிஜேசிடம் இருந்து ரூ.200 ஐ பறித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிம்சோனியை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிம்சோனி பிரபல ரவுடி என்பதும், இவர் மீது குளச்சல் போலீஸ் நிலையத்தில் மேலும் 4 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.