கூட்டுறவு கடன் சங்கத்தில் கொள்ளை முயற்சி: எட்டயபுரம் அருகே பரபரப்பு

லாக்கரை உடைக்க முடியாததால் அதிலிருந்த சுமார் 100 பவுன் நகைகள் தப்பியதாக தெரியவந்துள்ளது.
கூட்டுறவு கடன் சங்கத்தில் கொள்ளை முயற்சி: எட்டயபுரம் அருகே பரபரப்பு
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள வெள்ளையம்மாள்புரம் கிராம கூட்டுறவு கடன் சங்கத்தில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து லாக்கரைத் திறக்க முயன்ற துணிகரக் கொள்ளை முயற்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பூட்டு உடைப்பு

வெள்ளையம்மாள்புரம் கிராம கூட்டுறவு கடன் சங்கத்தில் நேற்று மாலை வழக்கமான பணிகள் முடிந்ததும், எழுத்தர் மாரீஸ்வரி கட்டிடத்தை பூட்டிவிட்டு சென்றார். இன்று காலை கூட்டுறவு சங்கச் செயலாளர் செல்வகுமார் (56) அலுவலகத்தைத் திறக்க வந்தபோது, முன்பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக உள்ளே சென்று பார்வையிட்டபோது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கட்டிடத்திற்குள் புகுந்து, அங்கிருந்த முக்கிய லாக்கரை உடைத்து கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்தது. ஆனால், லாக்கரை உடைக்க முடியாததால் அதிலிருந்த சுமார் 100 பவுன் நகைகள், பணம் மற்றும் முக்கிய பத்திரங்கள் தப்பியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொள்ளை முயற்சி

தகவலறிந்த எப்போதும்வென்றான் காவல் நிலைய ஆய்வாளர் உமா மகேஸ்வரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து தடயங்களைச் சேகரித்தனர்.

இந்த துணிகரக் கொள்ளை முயற்சி தொடர்பாக எப்போதும்வென்றான் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com