பட்டப்பகலில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.2 லட்சம் கொள்ளை - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

பெரியபாளையத்தில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.2 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.2 லட்சம் கொள்ளை - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
Published on

எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகைப்பேர் கிராமம் ராஜா தெருவில் வசித்து வருபவர் ரவிராஜ் (வயது 52). இவருக்கு பூரிவாக்கம் மற்றும் ஊத்துக்கோட்டை ஆகிய 2 இடங்களில் அரிசி ஆலைகள் உள்ளது. அரிசி ஆலைக்கு புதியதாக ஒரு எந்திரம் வாங்குவதற்காக அதற்காக ரூ.5.35 லட்சத்தை நேற்று மதியம் பெரியபாளையத்தில் உள்ள ஒரு வங்கியில் செலுத்தி விட்டு மீதி இருந்த ரூ.2 லட்சத்தை தனது காரின் முன்பக்க பகுதியில் வைத்துக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார்.

அப்போது வங்கியில் தனது செக் புக்கை மறதியாக வைத்துவிட்டு வந்தது நினைவிற்கு வந்தது. உடனடியாக காரை நிறுத்தி கண்ணாடிகளை ஏற்றிவிட்டு காரை பூட்டிக்கொண்டு வங்கிக்குள் சென்று தனது செக் புக்கை எடுத்துக்கொண்டு காரை நோக்கி நடந்து வந்தார். அப்பொழுது ஒரு மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து கொண்டு வந்த 2 மர்ம நபர்கள் வேகமாக வந்து காரின் இடது பக்க கண்ணாடியை உடைத்து கண் இமைக்கும் நேரத்தில் காரின் முன்பக்கத்தில் இருந்த ரூ.2 லட்சத்தை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ரவிராஜ் திருடன், திருடன் என்று கத்தினார். ஆனால், மர்ம நபர்களை பிடிக்க முடியவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில் பெரியபாளையம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள காண்காணிப்பு கேமரா பதிவுகளை சேகரித்தனர். கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியல் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com