சிங்கபெருமாள் கோவில் அருகே மின்சார ரெயில் மோதி காதல் ஜோடி பலி

சிங்கப்பெருமாள்கோவில் அருகே மின்சார ரெயிலில் அடிபட்டு காதல் ஜோடி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
சிங்கபெருமாள் கோவில் அருகே மின்சார ரெயில் மோதி காதல் ஜோடி பலி
Published on

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தாலுகா சாந்தமங்கலம் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். இவருடைய மகன் அலெக்ஸ்(வயது 21). ஐ.டி.ஐ. படித்து விட்டு செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதே பகுதியில் நண்பர்களோடு அறை எடுத்து தங்கி இருந்தார்.

அவர் வேலை பார்த்த அதே நிறுவனத்தில் தூத்துக்குடி மாவட்டம் சேதுபுண்ணவாய்க்கால் நாடார் தெருவை சேர்ந்த ஆரோக்கிய ஜெர்சலின்(18) என்ற பண்ணும் வேலை பார்த்து வந்தார். ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததால் இருவருக்கும் பழக்கமானது. நாளடைவில் காதலாக மாறியதாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு ஆரோக்கிய ஜெர்சலின் தங்கி இருந்த அறை அருகே உள்ள ரயில்வே தண்டவாளம் பகுதியில் அலெக்ஸ், ஆரோக்கிய ஜெர்சலினுடன் பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி இரவு நேர கடைசி மின்சார ரெயில் வந்து கொண்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த காதல் ஜோடி, ரெயில் மோதாமல் இருக்க தண்டவாளத்தின் ஓரமாக ஒதுங்கினர். அப்போது ரெயில் மோதியதில் அலெக்ஸ், ஆரோக்கிய ஜெர்சலின் இருவரும் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த தாம்பரம் ரயில்வே போலீசார், பலியான காதலர்கள் இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்த அலெக்ஸ், ஆரோக்கிய ஜெர்சலின் இருவரும் காதலித்து வந்துள்ளனர். வேலை முடிந்த பிறகு இரவு நேரங்களில் அடிக்கடி இருவரும் தண்டவாளம் பகுதியில் சந்தித்து பேசி வந்துள்ளனர். வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவும் அங்கு நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது செங்கல்பட்டில் இருந்து கடற்கரை நோக்கி மின்சார ரெயில் வந்ததால் தண்டாளத்தை கடந்து செல்ல முயன்றனர். ஆனால் அந்த பகுதியில் பள்ளமாக இருந்ததால் தண்டவாளத்தையாட்டி ஓரமாக நின்றபோது மின்சார ரெயில் மோதி பலியானது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதேபோல புதுக்கோட்டையை சேர்ந்தவர் அகிலன்(21). பட்டதாரியான இவர், கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் சென்னையில் வேலைக்கு சேர்ந்தார். தாம்பரம் சானடோரியத்தில் நண்பர்களோடு அறை எடுத்து தங்கி, மின்சார ரெயிலில் வேலைக்கு சென்று வந்தார்.

இவர், நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து மின்சார ரெயிலில் குரோம்பேட்டை ரெயில் நிலையம் வந்து இறங்கினார். பின்னர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றபோது மின்சார ரெயில் மோதியதில் அகிலன் தலை துண்டாகி பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com