பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை இன்று நிறுத்தம்

பராமரிப்பு பணி காரணமாக பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை இன்று நிறுத்தப்படுகிறது.
பழனி,
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவர்கள் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்ல படிப்பாதை பிரதான வழியாக உள்ளது. மேலும் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு எளிதில் சென்றுவர ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகிய சேவைகள் உள்ளன.
இதில் விரைவாகவும், இயற்கை அழகை ரசித்தபடியும் 3 நிமிடத்தில் மலைக்கோவிலுக்கு செல்வதால் பெரும்பாலான பக்தர்கள் ரோப்கார் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரோப்கார் பராமரிப்பு பணி காரணமாக தினமும் 1 மணி நேரமும், மாதத்துக்கு ஒரு நாளும், ஆண்டுக்கு ஒரு மாதமும் நிறுத்தப்படுவது வழக்கம்.
அதன்படி, இன்று (வெள்ளிக்கிழமை) பழனி ரோப்கார் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி ரோப்கார் சேவை இன்று ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படுகிறது. எனவே பக்தர்கள் மின்இழுவை ரெயில், படிப்பாதையை பயன்படுத்தி மலைக்கோவிலுக்கு சென்று முருகனை தரிசனம் செய்யுமாறு கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.






