

சென்னையை அடுத்த மாதவரம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரவி(வயது 36). ரவுடியாக வலம் வந்த இவர் மீது மாதவரம் போலீஸ் நிலையத்தில் வழிப்பறி, அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. மாதவரம் போலீஸ் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியாகவும் இருந்து வருகிறார். ரவி, கடந்த ஆகஸ்டு மாதம் கொளத்தூர் போலீஸ் துணை கமிஷனர் ராஜாராம் முன்னிலையில் ஆஜராகி, தான் திருந்தி வாழப்போவதாக பிரமாண உறுதிமொழி பத்திரம் எழுதிக்கொடுத்தார்.
இந்தநிலையில் கடந்த 3-ந்தேதி மாதவரத்தில் வழிப்பறியில் ஈடுபட்டதாக மாதவரம் போலீசார் ரவியை கைது செய்தனர். இதையடுத்து பிரமாண பத்திர உறுதிமொழியை மீறி மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்ட ரவியை 257 நாட்கள் சிறையில் அடைக்க கொளத்தூர் துணை கமிஷனர் உத்தரவிட்டார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.