கடலூர் அருகே வேனில் கடத்திய ரூ.1 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்; வியாபாரி கைது

கடலூர் அருகே வேனில் கடத்தி வரப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் புகையிலை பொருட்களை கடத்தி வந்த வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் அருகே வேனில் கடத்திய ரூ.1 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்; வியாபாரி கைது
Published on

நெல்லிக்குப்பம், 

வாகன சோதனை

கடலூர் அருகே தோட்டப்பட்டு கடலூர்-பண்ருட்டி சாலையில் நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அவ்வழியாக வந்த மினிவேனை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது வேனில் இருந்த 15-க்கும் மேற்பட்ட மூட்டைகளை பிரித்து பார்த்தபோது, அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 90 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

வியாபாரி கைது

இதையடுத்து வேனை ஓட்டி வந்தவரிடம் நடத்திய விசாரணையில், அவர் தோட்டப்பட்டு பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வசித்து வரும் கடலூர் அடுத்த அன்னவல்லி கிராமத்தை சேர்ந்த காய்கறி வியாபாரியான வெங்கடேசன்(வயது 40) என்பதும், பெங்களூருவில் இருந்து வேனில் காய்கறி, பூண்டு மூட்டைகளுக்குள் மறைத்து புகையிலை பொருட்களை கடத்தி வந்து ஊர், ஊராக சென்று கடைகளுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார், வெங்கடேசனை கைது செய்ததுடன், கடத்தி வரப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களையும், அதனை கடத்த பயன்படுத்தப்பட்ட மினிவேனையும் பறிமுதல் செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com