

சென்னை,
தெலங்கானா மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை தற்போது 69-ஆக அதிகரித்து உள்ளது. தெலங்கானாவில் பெய்த கனமழையால் தலைநகர் ஹைதராபாத் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளது.
இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலங்கானாவுக்கு ரூ.10 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதி உள்ள கடிதத்தில், தெலங்கானாவில் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் ஏற்பட்ட கனமழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மழை, வெள்ளத்தில் உயிரிழந்த மக்களுக்கு தமிழக அரசு மற்றும் தமிழக மக்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். மழை, வெள்ள நிவாரணப் பணிகளில் தெலங்கானா அரசு சிறப்பாக செயல்பட்டு துரிதமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், வெள்ள நிவாரணப் பணிகளில் தெலங்கானாவுக்கு தமிழக அரசு துணை நிற்கும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தமிழக அரசு மற்றும் மக்கள் சார்பில் தேவையான பாய், போர்வை உள்ளிட்ட பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசின் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து தெலங்கானாவுக்கு ரூ.10 கோடி நிதியுதவி அளிக்கப்படுகிறது என்று அதில் தெரிவித்துள்ளார்.