

சென்னை,
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது. கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு தீவிர பணியாற்றி வருகிறது.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு 21 நாட்கள் அமலில் உள்ளது. இந்த உத்தரவு கடந்த மார்ச் 24ந்தேதி பிறப்பிக்கப்பட்டது. தமிழகத்திலும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல தடை விதிக்கப்படுகிறது.
ஊரடங்கை மதித்து, மக்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கான பால், மருந்து, மளிகை பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்யும் கடைகளே திறந்திருக்கின்றன. இதேபோன்று அத்தியாவசிய சேவைக்கான பணிகள் செயல்பட்டு வருகின்றன. பிற பெரிய கடைகள், ஆலைகள், திரையரங்குகள் உள்ளிட்டவை மூடப்பட்டு உள்ளன.
ஊரடங்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இதனால், தமிழக அரசு சார்பில் அரிசி வாங்கும் அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் நிவாரண தொகை ரூ.1,000, அரிசி, பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் ஆகியவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு அதன்படி வழங்கப்பட்டது.
இந்நிலையில், முடிதிருத்துவோர், சலவை தொழிலாளர்கள் உள்ளிட்ட 14.7 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்து உள்ளது. இதனால், 15 நல வாரிய உறுப்பினர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.