ரூ.1212 கோடி தேர்தல் பறக்கும் படையால் பறிமுதல் - தேர்தல் ஆணையம் தகவல்

ரூ.495 கோடி தொகையானது, முறையான ஆவணங்களைச் சமர்ப்பித்ததன் அடிப்படையில், விடுவிக்கப்பட்டுள்ளது.
 ரூ.1212 கோடி தேர்தல் பறக்கும் படையால் பறிமுதல் - தேர்தல் ஆணையம் தகவல்
Published on

சென்னை,

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

1. வாக்காளர் பட்டியல்: 01.01.2026-ஐத் தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, இறுதி வாக்காளர் பட்டியல் 23.02.2026 அன்று வெளியிடப்பட்டது. மேலும் அதனைத் தொடர்ந்து, தொடர் திருத்தக் காலம் தொடங்கியது. இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட தேதியிலிருந்து, அதாவது 23.02.2026 முதல் 26.03.2026 வரை (வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதிக்கு பத்து நாட்கள் முன்புவரை) படிவங்கள் 6, 6A, 7 மற்றும் 8 ஆகியவற்றில் பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் நடைமுறையில் உள்ள அறிவுறுத்தல்களின்படி, முறையாகப் பரிசீலிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 06.04.2026 அன்றுள்ளவாறு புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல், உரிய வாக்காளர் பதிவு அலுவலர்களால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல்கள் தமிழ்நாடு, தலைமைத் தேர்தல் அதிகாரியின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. 06.04.2026 நிலவரப்படி, வாக்காளர் பட்டியலில் மொத்தம் 5,73,43,291 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், 2,80,30,658 ஆண் வாக்காளர்களும், 2,93,04,905 பெண் வாக்காளர்களும், 7,728 மூன்றாம் பாலின வாக்காளர்களும் அடங்குவர்.

வாக்குச்சாவடிகள்: 1200-க்கும் மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்ட வாக்குச்சாவடிகள், 'வாக்குச்சாவடிகள் குறித்த கையேடு - 2020'-இல் (Manual on Polling Stations, 2020) இடம்பெற்றுள்ள வழிகாட்டுதல்களின்படி மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்காக, மாநிலம் முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகளும், 33,211 வாக்குச்சாவடி அமைவிடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

ஊதியத்துடன் கூடிய விடுமுறை: மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-இன் பிரிவு 135B-இன் கீழ் இந்தியத் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களின்படி, பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக, வணிகம், வர்த்தகம், தொழிற்சாலை அல்லது வேறு ஏதேனும் நிறுவனங்களில் பணிபுரியும் ஒவ்வொரு நபருக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதில், சுழற்சி முறை அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களும், சம்பந்தப்பட்ட சட்டமன்றத் தொகுதிக்கு வெளியே பணிபுரியும் தற்காலிகத் தொழிலாளர்களும் அடங்குவர்.

பொது விடுமுறை: 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலையொட்டி, வாக்காளர்கள் அனைவரும் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக, வாக்குப்பதிவு நாளான 23.04.2026 அன்று பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மது விற்பனை இல்லாத நாட்கள் (Dry Days): தமிழ்நாடு மாநிலம் முழுவதும், அண்டை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் எல்லைப் பகுதிகளிலும், 21.04.2026 முதல் 23.04.2026 வரையிலும், வாக்கு எண்ணிக்கை நாளான 04.05.2026 அன்றும் 'மது விற்பனை இல்லாத நாட்களாக' அறிவிக்கப்பட்டுள்ளன.

2. இந்தியத் தேர்தல் ஆணையம், CAPF அல்லாத நடவடிக்கைகளில் ஒன்றாக, வாக்குப்பதிவு நாளன்று பதட்டமான வாக்குச்சாவடிகளுக்கு நுண் பார்வையாளர் நியமிக்கலாம் என அறிவுறுத்துகிறது. நுண் பார்வையாளர், வாக்குச்சாவடியில் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளைக் கண்காணிப்பார். தேர்தல் செயல்முறைகள் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடைபெறுகின்றனவா என்பதையும், வாக்குப்பதிவில் எந்தவிதமான முறைகேடும் நடைபெறவில்லை என்பதையும் கண்காணிப்பதே அவரது பணியாகும். பொதுப் பார்வையாளர், நுண் பார்வையாளர்களின் பணிகளை மேற்பார்வையிடுவார் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பார். வாக்குப்பதிவு செயல்முறை முடிந்த பிறகு, நுண் பார்வையாளர் பொதுப் பார்வையாளருக்கு ஒரு அறிக்கையைச் சமர்ப்பிப்பார். 2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்காக 7014 நுண் பார்வையாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

3. நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல், 2026 க்காக இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டிலுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 136 பொதுப்பார்வையாளர்கள், 40 காவல் பார்வையாளர்கள் மற்றும் 150 செலவினப் பார்வையாளர்களையும் நியமித்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 தொடர்பாக, 83875 காவல்துறை பணியாளர்கள் மற்றும் 40427 காவல்துறை அல்லாத பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், மத்திய உள்துறை அமைச்சகம் மத்திய ஆயுத பாதுகாப்புப் படையின் 300 கம்பெனிகளை பாதுகாப்பான, சுதந்திரமான மற்றும் நியானமான தேர்தலை நடத்துவதற்காக நியமித்துள்ளது. அந்த கம்பெனிகள் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

4. அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் குழுக்கள், 24x7 நேரமும் தீவிரமாகக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. 20.04.2026 அன்றைய நிலவரப்படி, இக்குழுக்களால் கைப்பற்றப்பட்ட பொருட்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பறிமுதல் செய்யப்பட்ட மொத்தத் தொகையில் சுமார் ₹ 495 கோடி தொகையானது, முறையான ஆவணங்களைச் சமர்ப்பித்ததன் அடிப்படையில், பொதுமக்களுக்கு எவ்வித இடையூறோ அல்லது அலைக்கழிப்போ இன்றி விடுவிக்கப்பட்டுள்ளது..

“தேர்தல் திருவிழா - தமிழ்நாட்டின் பெருவிழா”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com