

சென்னை,
சென்னை தி நகரில் உள்ள எச்.டி.எப்.சி வங்கிக் கிளையில் வாடிக்கையாளர்கள் 100 பேரின் வங்கிக்கணக்குகளில் தலா ரூ. 13 கோடி திடீரென வரவு வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொழில் நுட்ப கோளாறு காரணமாக இந்த தவறு நடந்ததாகக் கூறிய வங்கி நிர்வாகம், உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிக்கணக்குகளை தற்காலிகமாக முடக்கியது.
இந்த நிலையில், புதிய மென்பொருளை எச்.டி.சி.எப்.சி வங்கி சர்வரில் நிறுவியதே குழப்பத்திற்கு காரணம் எனத்தகவல் வெளியாகியுள்ளது. வாடிக்கையாளர்கள் பக்கத்தில் சில தகவல்களை அப்டேட் செய்யும் போது வரவு பக்கத்தில் குழப்பம் நிகழ்ந்துள்ளது என வங்கி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு விசாரணை தொடங்கியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.