

சென்னை,
நடிகர் விஷால், தன்னுடைய படத்தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரியின் படத்தயாரிப்புக்காக அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ. 21.29 கோடி கடன் கேட்டிருந்தார். இந்த பணத்தை லைகா நிறுவனம் செலுத்தியிருந்தது. இந்த பணத்தை திருப்பி செலுத்தும் வரையில், விஷால் தயாரிப்பு நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமை லைகா நிறுவனத்திடம் வழங்கப்படுவதாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், பணத்தை கொடுக்காமல் விஷாலின் படத்தயாரிப்பு நிறுவனம் வீரமே வாகை சூடும் திரைப்படத்தை திரையில் வெளியிட முயற்சி செய்தது. இதையடுத்து தொகையை செலுத்தாமல் வீரமே வாகை சூடும் படத்தை வெளியிடவும், சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமையை விற்கவும் தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் லைகா நிறுவனம் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, விஷால் கொடுக்கவேண்டிய தொகையில் 15 கோடியை ஐகோர்ட்டின் தலைமை பதிவாளர் பெயரில் வைப்பீடாக செலுத்தவேண்டும் என்றும், அந்த வைப்புத்தொகைக்கான ரசீதை தலைமை பதிவாளரிடம் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கு மார்ச் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.