ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நலவாரியம் மூலம் ரூ.20 லட்சம் விபத்து காப்பீடு: தூத்துக்குடி மாநாட்டில் தீர்மானம்

ஆட்டோ கட்டணங்களை தமிழக அரசு மறு நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தூத்துக்குடியில் நடைபெற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நலவாரியம் மூலம் ரூ.20 லட்சம் விபத்து காப்பீடு: தூத்துக்குடி மாநாட்டில் தீர்மானம்
Published on

தூத்துக்குடியில் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் மாவட்ட மாநாடு சிஐடியு மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் தளவாய்ராஜ் தலைமை தாங்கினார். கோவில்பட்டி ஆட்டோ ஓட்டுனர் பால்வண்ணநாதன் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ரசல் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்.

நடைபெற்ற வேலைகள் குறித்த விபரங்களை சிஐடியு மாவட்ட உதவித் தலைவர் சங்கரன் முன்வைத்தார். ஆட்டோ ஓட்டுனர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து தொழிலாளர்கள் கருத்துக்களை தெரிவித்தனர். மாநாட்டு தீர்மானங்களை முனீஸ்வரன் முன்மொழிந்தார். புதிய நிர்வாகிகள் தேர்வுக்கு பின் சிஐடியு மாவட்டத் தலைவர் பேச்சிமுத்து மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.

புதிய மாவட்ட தலைவராக கோவில்பட்டி பாலமுருகன், மாவட்டச் செயலாளராக முருகன், பொருளாளராக தளவாய்ராஜ், துணைத் தலைவர்களாக கோவில்பட்டி கிருஷ்ணன், கதிர்வேல், பால்வண்ணநாதன் தூத்துக்குடி முனீஸ்வரன், அசனார், வில்பிரட், முருகேசன், குரூஸ் அந்தோணி, குறுக்கு சாலை முனீஸ்வரன், பகவதி, ஓட்டப்பிடாரம் தங்கமாரியப்பன், எப்போதும் வென்றான் முக்கையராஜ், கதிர்வேல், வீரபாண்டியன்பட்டணம் ஜெனிஸ்ராயன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மாநாட்டில் நீண்ட காலமாக இயங்கி வரும் ஆட்டோ ஸ்டாண்டுகளை தொழிலாளர்கள் ஏற்கும் வகையில் மாற்று இடம் வழங்காமல் அகற்றக் கூடாது. அத்தியாவசிய பொருட்கள், எரிபொருள் விலையேற்றத்தை கணக்கில் கொண்டு ஆட்டோ கட்டணங்களை தமிழக அரசு மறு நிர்ணயம் செய்ய வேண்டும். சுய தொழில் புரியும் ஆட்டோ ஓட்டுனர்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் பெருநிறுவன அத்துமீறல்களை தடுத்து நிறுத்த வேண்டும்.

ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மானிய விலையில் எரிபொருள் வழங்க வேண்டும். நலவாரிய ஓய்வூதியத்தை ரூ.3,000 ஆகவும், இதர பணப்பலன்களையும் உயர்த்தி வழங்க வேண்டும். ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ரூ.20 லட்சம் விபத்து காப்பீடு நலவாரியத்தின் மூலம் வழங்க வேண்டும். புதிய ஆட்டோ வாங்கும் தொழிலாளர்களுக்கு 50 சதம் மானியத்துடன் கடன் வழங்க வேண்டும். வீடு இல்லாத ஆட்டோ தொழிலாளர்களுக்கு இலவச மனைப்பட்டாவும், மானிய வீட்டு கடன் வசதியும் செய்து தர வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com