

தூத்துக்குடி,
தூத்துக்குடியில் இன்டர்நேஷனல் கரன்சி டிரேடிங் செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று நம்ப வைத்து ரூ.24.64 லட்சம் மோசடி செய்த 2 பேரை சைபர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி பகுதியை சேர்ந்த ஒருவரிடம், முகநூல் மூலம் அறிமுகமாகி xs Markets என்ற இணையதளத்தில் இன்டர்நேஷனல் கரன்சி டிரேடிங் செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று நம்ப வைத்து ரூ.24 லட்சத்து 64 ஆயிரத்து 800 பணத்தை வங்கிக் கணக்குகளில் பெற்று மோசடி செய்ததாக, பாதிக்கப்பட்ட நபர் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் சைபர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு திருப்பூர் மாவட்டம், அவிநாசி பகுதியை சேர்ந்த காட்டுராஜா மகன் விவேக்ராஜா (வயது 33) மற்றும் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஜீவகன் மகன் பரேஷ்குமார்(30) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் பணத்தை பாதிக்கப்பட்டவருக்கு பெற்றுத் தந்து, மேலும் தொடர்ந்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.