

சென்னை,
தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக, தலைவர் கருணாநிதி தனது சொந்த பொறுப்பில் அளித்த ரூ.5 கோடியினை வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கப்பெறும் வட்டித் தொகையினைக் கொண்டு, மாதந்தோறும் ஏழை, எளிய நலிந்தோருக்கு உதவித் தொகையாக 2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை வழங்கிய நிதி ரூ.4 கோடியே 51 லட்சத்து 90 ஆயிரம் ஆகும்.
கடந்த மாதம் (பிப்ரவரி) வட்டியாக கிடைத்த தொகையில் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சம் 17-3-2018 அன்று (நேற்று) வழங்கினார்.
நிதி பெறுவோர் வெளி மாவட்டங்களில் இருந்து வந்துபோகிற செலவினத்தை தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவுக் காசோலையாக அனுப்பப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.