

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு இன்ஸ்டாகிராமில் மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்காக வந்த விளம்பரத்தை நம்பி, அந்த பெண் மேற்சொன்ன விளம்பர நிறுவனத்தினரை தொடர்பு கொண்டு மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக 3 லட்சம் பணத்தை செலுத்தி உள்ளார்.
பின்னர் அந்த நபர் மருத்துவ உபகரணங்களை அனுப்பாமலும், பணத்தை திருப்பிக் கொடுக்காமலும் இருந்ததால், தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த அந்த பெண் இதுகுறித்து NCRP-ல் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி, தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு ஏ.டி.எஸ்.பி. சகாய ஜோஸ் மேற்பார்வையில், சைபர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொழில்நுட்பரீதியாக விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் போலீசார் மேற்சொன்ன இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பர நிறுவனத்தினரை கண்டறிந்து அவரது வங்கி கணக்கை முடக்கம் செய்து, சம்பந்தப்பட்ட வங்கியை தொடர்பு கொண்டு நடவடிக்கை மேற்கொண்டு மோசடி செய்யப்பட்ட 3 லட்சம் பணம் திரும்பப் பெறப்பட்டு மீட்கப்பட்டது. மேலும் இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனையடுத்து நேற்று (08.04.2025) மீட்கப்பட்ட ரூ.3 லட்சம் பணத்தை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தார்.