ரூ.4 கோடி சிக்கிய விவகாரம்: 3 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை

நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.4 கோடி சிக்கிய வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது.
ரூ.4 கோடி சிக்கிய விவகாரம்: 3 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை
Published on

சென்னை,

சென்னை எழும்பூரில் இருந்து கடந்த மாதம் 6-ந்தேதி நெல்லை புறப்பட்டு சென்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில், சிலர் ரூ.4 கோடி கொண்டு செல்வதாக தேர்தல் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தாம்பரம் ரெயில் நிலையத்தில் நின்ற அந்த ரெயிலில் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

அப்போது அந்த ரெயிலில் இருந்த 3 பேர் ரூ.4 கோடி கொண்டு சென்றது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த பணத்தை எடுத்து சென்ற சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய 3 பேரை தாம்பரம் போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

போலீஸ் விசாரணையில் இந்த ரூ.4 கோடி பணத்தை நெல்லை தொகுதியில் போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு எடுத்து சென்றதாக கைதான 3 பேரும் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து நயினார் நாகேந்திரன் மீதும் வழக்கு பாய்ந்தது. அவரை விசாரணைக்கு ஆஜராக தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பினார்கள். மே.2-ந்தேதி அன்று விசாரணைக்கு ஆஜராவேன் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். வழக்கு தொடர்பான ஆவணங்களை தாம்பரம் போலீசாரிடம் இருந்து பெற்ற சி.பி.சி.ஐ.டி. போலீசார், உடனடியாக விசாரணையை தொடங்கினார்கள். நயினார் நாகேந்திரன் மீதும், ரூ.4 கோடி பணத்துடன் கைது செய்யப்பட்ட சதீஷ், நவீன், பெருமாள் ஆகியோர் மீதும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் புதிதாக வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அழைத்ததன் பேரில் சதீஷ், நவீன், பெருமாள் ஆகியோர் நேற்று விசாரணைக்கு ஆஜரானார்கள். அவர்களிடம் சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள். வழக்கு தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விரைவில் சம்மன் அனுப்புவார்கள் என்று தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com