

கோவை,
கோவை செம்மொழி பூங்கா திட்ட பணியில் ரூ.40 கோடி முறைகேடு நடைபெற்று இருப்பதாக ஒப்பந்ததாரர் சங்கம் புகார் செய்துள்ளது. தென்மண்டல ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பில் அமைச்சர் சம்பத்குமார் மற்றும் நகராட்சி நிர்வாகம், பொதுப்பணித்துறை நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டு உள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
கோவை காந்திபுரத்தில் கடந்த தி.மு.க. ஆட்சியில் செம்மொழி பூங்கா திட்ட பணிகள் நடந்தது. சுமார் ரூ.45 கோடிக்கு திட்ட பணி மதிப்பீடு செய்து டெண்டர் விடப்பட்டது. ஆனால் அதன்பிறகு கூடுதல் மதிப்பீடு என்ற பெயரில் சுமார் ரூ.40 கோடிக்கு மேல் மாநகராட்சி நிதியில் கூடுதல் தொகை ஒதுக்கி பணிகள் நடந்தது. இது ஒரு நூதன கொள்ளை ஆகும்.
இந்த மதிப்பீடுகளில் ஒன்றுக்கு 2 மடங்காக விலைப் பட்டியலில் இல்லாத பல பொருட்களை பயன்படுத்தி போலியான விலைப்பட்டியல் தயார் செய்து சுமார் ரூ.80 கோடி செலவு செய்து மாநகராட்சி பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. இதனை பொதுப்பணித்துறை வல்லுனர்கள், தனியார் வல்லுனர்கள் மற்றும் தணிக்கை அதிகாரிகளை வைத்து ஆய்வு செய்தால், சுமார் ரூ.40 கோடிக்கு மேல் போலி பில் போட்டு முறைகேடு செய்தது வெளிச்சத்துக்கு வரும்.
இதுபோன்று ஒரு சாலை அமைத்தால் 5 ஆண்டுகள் நீடித்து நிலைக்க வேண்டும். தேர்தல் செலவுக்கு பணம் தேவை என்பதால் 5 ஆண்டு காலத்திற்குள் போட்ட சாலைகளை பெரும்பாலும் தேர்வு செய்துள்ளனர். அதனை திரும்ப அமைப்பது போல பாசாங்கு செய்து குறைந்த கனத்தில் போட்டு 50 சதவீதம் மட்டுமே பணி செய்து 100 சதவீதத்துக்கு பில் போட்டுள்ளனர். எனவே கடந்த 6 மாதங்களில் நடைபெற்ற அனைத்து பணிகளையும் மறுஆய்வு செய்து அதன் தரம் மற்றும் அளவை சரி பார்த்து தவறு இருக்கும் பணிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செம்மொழி பூங்காவிற்கு முதலில் தயாரிக்கப்பட்ட மதிப்பீடு எவ்வளவு, அதன்பின்னர் தற்போது வரையிலான செலவினம் எவ்வளவு என பார்த்து அதன் முழு உண்மை தன்மையை ஆய்வு செய்ய வேண்டும். இதில் மதிப்பீடு தயாரித்தவர். பணியை பார்த்து போலி பில் தயாரித்த அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மீதும் மற்றும் தேர்தல் நேரத்தில் 50 சதவீதம் மட்டும் பணி செய்து போலி பில் பெற்றவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.