ஆன்லைன் சூதாட்டத்தால் ரூ.50 லட்சம் கடன்: தனியார் நிறுவன ஊழியர் எடுத்த விபரீத முடிவு

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த அவர், ஏராளமான பணத்தை இழந்து அதிகளவில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
ஆன்லைன் சூதாட்டத்தால் ரூ.50 லட்சம் கடன்: தனியார் நிறுவன ஊழியர் எடுத்த விபரீத முடிவு
Published on

கிருஷ்ணகிரி,

அரியலூர் மாவட்டம் கூவாகம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் மணிவாசகன் (வயது 36). ஓசூர் 2-வது சிப்காட் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி அருணா. இவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 1 வயதில் விசாகன் என்ற ஆண் குழந்தை உள்ளான். மணிவாசகன் தனது குடும்பத்தினருடன் ஓசூர் தோட்டகிரி பகுதியில் வசித்து வந்தார்.

மணிவாசகனுக்கு ஆன்லைன் சூதாட்டத்தில் அதிக ஈடுபாடு இருந்ததாக தெரிகிறது. அவர் அதிக நேரம் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் ஏராளமான பணத்தை இழந்து அதிகளவில் கடன் வாங்கியதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் ஊருக்கு சென்ற மனைவி அருணா நேற்று காலை தனது கணவருக்கு போன் செய்தார். ஆனால் அவர் போனை எடுத்து பேசாததால் அச்சமடைந்த அவர் அருகே வசிப்பவர்களுக்கு போன் செய்து தங்கள் வீட்டுக்கு சென்று பார்க்குமாறு கூறினார். பக்கத்து வீட்டில் வசிக்கும் மணிகண்டன் என்பவர் சென்று பார்த்தபோது மணிவாசகன் வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து உடனடியாக மணிவாசகத்தின் மனைவி, ஓசூர் அட்கோ போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மணிவாசகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது வீட்டில் உள்ள ஒரு மேஜையில் மணிவாசகன் தனது குடும்பத்தினருக்கு எழுதிய உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

அதில் நான் ஆன்லைன் சூதாட்டத்தில் ஏராளமான பணத்தை இழந்து விட்டேன். மேலும் ரூ.50 லட்சம் வரை கடன் உள்ளது. கடனை திருப்பி செலுத்த முடியாததால் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று அந்த கடிதத்தில் எழுதி வைத்திருந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com