பெரம்பூர் ரெயில் நிலையத்தில் வாலிபரிடம் ரூ.52 லட்சம் பறிமுதல்

பெரம்பூர் ரெயில் நிலையத்தில் வாலிபரிடம் உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த ரூ.52 லட்சத்தை ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். அது ஹவாலா பணமா? என விசாரித்து வருகின்றனர்.
பெரம்பூர் ரெயில் நிலையத்தில் வாலிபரிடம் ரூ.52 லட்சம் பறிமுதல்
Published on

பெரம்பூர்,

சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடகா மாநிலத்தில் இருந்து சென்னை சென்டிரலுக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயில் பெரம்பூர் ரயில் நிலையத்தில் நின்றது.

அதில் இருந்து இறங்கிய வாலிபர் ஒருவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார், அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் கட்டுக்கட்டாக ரூ.52 லட்சம் பணம் இருந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார், அவரை பரம்பூர் ரெயில்வே போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர்.

ஹவாலா பணமா?

விசாரணையில் அவர், ஆந்திர மாநிலம் கம்பசாலாவைச் சேர்ந்த நாராயணப்பேட்டா வசீம் அக்ரம் (வயது 26) என்பதும், கர்நாடக மாநிலத்தில் இருந்து அந்த பணத்தை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கொண்டு வந்ததும் தெரிந்தது. ஆனால் அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை.

இதனால் அது ஹவாலா பணமாக இருக்கலாம்? என்று கருதிய ரெயில்வே போலீசார், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை இன்ஸ்பெக்டர் தாமோதரனிடம் அந்த பணத்தையும் பிடிபட்ட வசீம் அக்ரத்தையும் ஒப்படைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com