

மதுரை,
ஆரப்பாளையம் மணிநகரம் மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம், இவர் தேனி கலெக்டர் அலுவலகத்தில் பி.ஆர்.ஓ.வாக பணியாற்றினார். தாமரைக்குளத்தைச் சேர்ந்தவர் முனீஸ்வரன் மனைவி சாந்தி(48) தன் மகன் சூரியநாராயணனுக்கு அரசு வேலை வாங்க முயன்றார். இந்நிலையில் 2021ல் சாந்திக்கு சண்முகசுந்தரம் மற்றும் அவரது மனைவி செண்பகவள்ளியும் அறிமுகம் செய்து உள்ளார்.
அப்போது, தனக்கு அரசியல்வாதிகள் அறிமுகம் இருப்பதாகவும், மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகவும் கூறி சண்முகசுந்தரம் சாந்தியிடம் பல தவணைகளாக ரூ.50 லட்சம் பெற்றுள்ளார். பின்னர் பல மாதங்கள் கடந்தும் வேலை வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார். இதுகுறித்து சாந்தி தேனி எஸ்.பி. சினேகபிரியாவிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அல்லிநகரம் செல்லத்தம்பியிடம் ரூ.4 லட்சம், கண்டமனூர் பவித்ராவிடம் ரூ.4 லட்சம், பெரியகுளம் பழனிக்குமாரிடம் ரூ.12 லட்சம், தென்கரை முத்துப்பாண்டியிடம் ரூ.4 லட்சம் என மொத்தம் ரூ.74 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த சண்முகசுந்தரத்தை மதுரையில் தேனி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.