ரூ.80 கோடி அன்னிய செலாவணி மோசடி கோ.சி.மணி மகன் சென்னையில் கைது

தி.மு.க. முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் மகன் அன்பழகன் 4 மாதங்களுக்கு முன்னர் ரூ.80 கோடி அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சிக்கி இருந்தார். நேற்று இரவு அவர் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார்.
ரூ.80 கோடி அன்னிய செலாவணி மோசடி கோ.சி.மணி மகன் சென்னையில் கைது
Published on

சென்னை

சென்னை மண்ணடியை சேர்ந்தவர் லியாகத் அலி. இவரது வங்கி கணக்கில் ரூ.8 கோடி பணம் இருந்ததை அமலாக்க பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். கடந்த மார்ச் மாதம் இது தொடர்பாக லியாகத் அலியிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது அவர் போலியாக பல்வேறு நிறுவனங்களை தொடங்கி அதன் மூலம் எலக்ட்ரானிக் பொருட்களை இறக்குமதி செய்ததாக கணக்கு காட்டி இருப்பது தெரிய வந்தது.

எலக்ட்ரானிக் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக ஹாங்காங் நாட்டிற்கு முறைகேடாக ரூ.80 கோடிக்கு ஹவாலா பணத்தை லியாகத் அலி அனுப்பி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அன்னிய செலாவணி மோசடி வழக்கில் அவர் கைதாகி சிறை சென்றார். இது தொடர்பாக அமலாக்க பிரிவினர் விசாரணை நடத்தினர்.

அப்போது ரூ.80 கோடி மோசடியில் கோ.சி.மணியின் மகன் அன்பழகனுக்கும் தொடர்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து திருவான்மியூரில் உள்ள வீட்டில் அன்பழகன் கைது செய்யப்பட்டார்.

லியாகத் அலி கைதானவுடன் அவரது வங்கி கணக்குகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த போது 8 நிறுவனங் களை போலியாக தொடங்கி அதன் மூலம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கணக்கு தொடங்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இது தொடர்பாக வங்கிகளில் உள்ள கேமராக்களை அமலாக்கத்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது கோ.சி.மணியின் மகன் அன்பழகன் அடிக்கடி வங்கிக்கு வந்து சென்றதும், ரூ.80 கோடி பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதும் உறுதியானது. இதையடுத்தே அமலாக்கத்துறை அதிகாரிகள் அன்பழகனை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கைதான அன்பழகன் நேற்று இரவு எழும்பூரில் உள்ள மாஜிஸ்திரேட்டு ரோஸ்லின் துரை வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ரூ.80 கோடி ஹவாலா பணம் யாருடைய பணம் என்பது தெரியவில்லை. சென்னையை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரது பணம் என்றும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com