தூத்துக்குடியில் ஏ.டி.எம். மையத்திற்கு கொண்டு சென்ற ரூ.30 லட்சம்: பறக்கும் படை சோதனையில் விடுவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை முறையாக அமல்படுத்த 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தலா 54 பறக்கும் படை குழுக்கள் மற்றும் 54 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடியில் ஏ.டி.எம். மையத்திற்கு கொண்டு சென்ற ரூ.30 லட்சம்: பறக்கும் படை சோதனையில் விடுவிப்பு
Published on

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதனைத் தூத்துக்குடி மாவட்டத்தில் முறையாக அமல்படுத்த 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தலா 54 பறக்கும் படை குழுக்கள் மற்றும் 54 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தக் குழுவினர் அந்தந்த தொகுதிகளின் முக்கிய இடங்களில் வாகனத் தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்குப் பணம் அல்லது பரிசுப் பொருட்கள் கொண்டு செல்கிறார்களா? என்பது குறித்துத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் ரொக்கப் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

நேற்று காலை தேர்தல் அதிகாரி ஜேனட் தலைமையிலான பறக்கும் படை குழுவினர், பண்டுகரை சாலையில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை மறித்துச் சோதனை செய்தபோது, அதில் ரூ.30 லட்சம் ரொக்கப் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாகக் காரில் இருந்தவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் தனியார் வங்கி ஊழியர்கள் என்பதும், புதுக்கோட்டையில் உள்ள தனியார் ஏ.டி.எம். மையத்தில் பணம் நிரப்புவதற்காக அந்தப் பணத்தைக் கொண்டு செல்வதும் தெரியவந்தது.

இதற்கான உரிய ஆவணங்கள் உள்ளதா? என்று அதிகாரிகள் கேட்டபோது, வங்கி ஊழியர்கள் டிஜிட்டல் முறையில் உரிய ஆவணங்களைக் காண்பித்தனர். அவற்றை அதிகாரிகள் முழுமையாகச் சரிபார்த்த பின்னர், ரூ.30 லட்சம் பணத்தை விடுவித்து வங்கி ஊழியர்களை அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com