திமுக பிரமுகரின் ரியல் எஸ்டேட் அலுவலக பூட்டை உடைத்து ரூ.45 ஆயிரம் திருட்டு

குரும்பூரைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகர் ஒருவர், தனது ரியல் எஸ்டேட் அலுவலகத்தை வழக்கம்போல் இரவில் பூட்டிவிட்டு, அடுத்த நாள் காலையில் வந்து பார்த்தபோது அலுவலகப் பூட்டு உடைக்கப்பட்டு ரூ.45 ஆயிரம் திருடு போயிருந்தது.
பணம் திருட்டு
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூரில் தி.மு.க. பிரமுகரின் அலுவலகப் பூட்டை உடைத்து, பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.45 ஆயிரம் ரொக்கப் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திமுக பிரமுகரின் ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் பணம் திருட்டு

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூரைச் சேர்ந்த நயினார் மகன் பாக்யராஜ் (வயது 41). தி.மு.க. பிரமுகரான இவர் குரும்பூர் பிரதான சாலையில் அலுவலகம் அமைத்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் தனது அலுவலகத்தை பூட்டிவிட்டு அவர் வீட்டுக்குச் சென்றுள்ளார். பின்னர் நேற்று காலை 9 மணியளவில் பாக்யராஜ் மீண்டும் அலுவலகத்திற்கு சென்று பார்த்தபோது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

போலீசார் விசாரணை

உள்ளே சென்று பார்த்தபோது, அலுவலகத்தில் இருந்த பீரோவும் பலவந்தமாக உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.45 ஆயிரம் ரொக்கப் பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. நள்ளிரவில் நடமாடிய மர்ம நபர் இந்த துணிகர திருட்டு சம்பவத்தில் கைவரிசை காட்டியுள்ளார். இதுகுறித்து பாக்யராஜ் அளித்த புகாரின் பேரில், குரும்பூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com