தென் மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்த அனுமதி -மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களை பிற தென் மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்த அனுமதி அளித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
தென் மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்த அனுமதி -மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
Published on

மதுரை,

தென் மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, ஊர்வலத்துக்கு யார் பொறுப்பேற்பது என்பது குறித்த விவரங்களை குறிப்பிட்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று முன்தினம் நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையில் அரசுத்தரப்பு கூடுதல் தலைமை வக்கீல் வீராகதிரவன், அரசு குற்றவியல் வக்கீல் அன்புநிதி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

அனுமதி

அப்போது மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வருகிற 27-ந் தேதி மருது சகோதரர்களின் குருபூஜையும், 30-ந் தேதி தேவர் குருபூஜையும் நடக்க உள்ளது. இதற்காக சுமார் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடியில் நடந்து வரும் தசரா பண்டிகைக்காகவும் அதிக எண்ணிக்கையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எனவே, வருகிற 30-ந் தேதிக்கு பின்னர் ஊர்வலத்துக்கு அனுமதி கொடுப்பது பற்றி பரிசீலனை செய்யலாம் என வாதிடப்பட்டது. பின்னர் இந்த வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டது.

இந்தநிலையில் நேற்று இந்த வழக்கு மீண்டும் நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது. பிற தென் மாவட்டங்களில் போலீசாரின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஊர்வலம் நடத்திக்கொள்ளலாம் என்று நீதிபதி உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com